சிபிஎம் தொண்டர்களைத் தாக்கிய பொதுமக்கள்
சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ளது பந்தபுள்ளி கிராமம். இங்கு கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் 10 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சாமி கும்பிட்டு வருகின்றனர். இங்கு சாமி கும்பிடுவதற்கு அனுமதி கேட்டு தலித் இனமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நெல்லை ஆர்டிஓ தலைமையில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் சங்கரன்கோவில் உரி்மையியல் கோர்ட்டில் நடந்த வழக்கில் பந்தப்புளி மாரியம்மன் கோவிலில் அனைத்து தரப்பினரும் சாமி கும்பிடலாம் என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட் கிளையிலும் இருதரப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் மலையில் தங்கியிருந்த கிராம மக்களிடம் கோயில் பிரச்சனை தொடர்பாக பந்தபுள்ளி அரசியல் கட்சி தலைவர்களோ, ஜாதி கட்சி தலைவர்கள் யாரும் நுழைய மாட்டார்கள். மீறி வந்தால் கைது செய்வோம் என்று போலீசார் உத்திரவாதம் வழங்கியதாக தெரிகிறது.
இதன் காரணமாக மலையில் குடியேறிய மக்கள் போராட்டத்தை கைவிட்டு பந்தபுள்ளி கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆலய நுழைவு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மா.கம்யூ மாவட்ட செயலாளர் பழனி, முனனாள் எம்எல்ஏ கிருஷ்ணன், சங்கரன்கோவில் தலுகா செயலாளர் முத்து பாண்டியன், மற்றும் பலர் கம்யூ கட்சிக்கு சொந்தமான காரில் பந்தபுள்ளி செயலாளர் நாகராஜனை சந்திப்பதற்காக கிராமத்திற்குள் சென்றனர்.
அப்போது மலையில் இருந்து கிராமத்திற்குள் திரும்பிய கிராம மக்கள் மா.கம்யூ காரை முற்றுகையிட்டு தீடீரென கம்பு மற்றும் கைகளால் தாக்க தொடங்கினர்.
அங்கு பாதுகாப்பிற்கு சுமார் 10 போலீசார் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தை தடுக்க முடியவில்லை. இதில் முன்னால் எம்எல்ஏ கிருஷ்ணனின் கையில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் முற்றுகை மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பந்தபுளியை சேர்ந்த சின்னகணேசன் மனைவி கந்தம்மாள், குருசாமி மனைவி சீனியம்மாள் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் சங்கரன்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஏராளமான போலீசார் பந்தபுளியில் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications