ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர் இ தொய்பாவுக்கும் இடையே எந்தவிதமான உறவும், தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
நியூஸ்வீக் இதழுக்கு அவர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கர் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. லஷ்கர் அமைப்பு பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை ஐஎஸ்ஐ அனுமதிக்காது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
பாகிஸ்தானை முன்பு ஆட்சி புரிந்த சர்வாதிகாரிகள்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை உருவாக்கினர். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நிலைமை பெருமளவில் மாறி விட்டது.
பாகிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எதிராகவோ அல்லது எங்களது நண்பர்களுக்கு எதிராகவோ பாகிஸ்தான் மண்ணை யாரும் பயன்படுத்த முடியாது.
தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலரைக் கைது செய்துள்ளோம்.
எனது கடமையிலிருந்து நான் ஒருபோதும் தவற மாட்டேன். எனது மண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க முடியாது.
அதேபோல ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதலிலும் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இல்லை. இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை எங்களிடம் எதுவும் பேசவில்லை. எந்த ஆதாரத்தையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. காபூல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications