இந்திய போர் விமானங்கள் ஊடுறுவல் - பாக். புகார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் 2 முறை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் வக்கார் ஜாபர் கூறுகையில், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதியில், 2 முதல் 4 கிலோமீட்டர் வரைக்கும் இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் 2 முறை ஊடுறுவியுள்ளன.
காஷ்மீரிலிருந்து இந்த போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. லாகூர் வான் பகுதியில் இவை வட்டமிட்டுச் சென்றுள்ளன.
இதை அறிந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரைந்து சென்றன. இதையடுத்து இந்திய விமானப்படை விமானங்கள் திரும்பிச் சென்று விட்டன.
எந்த சவாலையும் சந்திக்க பாகிஸ்தான் விமானப்படை தயாராக உள்ளது என்றார் அவர்.
இந்தியா மறுப்பு
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை தரப்பில் கூறுகையில், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதிக்குள் செல்லவில்லை. இந்தத் தகவல் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications