தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அமைக்கப்படவுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் திடீரென நடந்தது. இதில், சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகளுக்கான சட்டத்தை திருத்தி அமைக்கவும், தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைக்கவும் அக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.
இக்கூட்டத்தில் பொடா போன்ற சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பொடா சட்டம் போன்ற ஒன்றைக் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்ததால் அது பரிசீலிக்கப்படவில்லை.
இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், பொடா மாதிரியான சட்டங்கள் கோர்ட்டில் நிற்காது என்றார்.
வெளியுறவுத்துத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொடா சட்டம் கடந்த காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இதுபோன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தை அது பயன்படுத்த வேண்டும். நாம் எது செய்தாலும், அது மக்களுக்கு, தீவிரவாத விஷயத்தில் நாம் சீரியஸாக இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும் என்றார்.
அப்போது பெரும்பாலான அமைச்சர்கள் பெடரல் விசாரணை ஏஜென்சி அந்த கருத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்றனர்.
அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத் திருத்தத்தில் பொடா சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் இடம் பெறாது எனத் தெரிகிறது.
நேற்றைய கூட்டத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை சட்டத் திருத்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தில் என்ன அம்சங்கள் இடம் பெறும் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் விமான நிலையங்களில் மட்டுமே சிஐஎஸ்எப் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதை அரசு கட்டடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விஸ்தரிக்க வகை செய்யப்படும் எனத் தெரிகிறது.