தாக்கத் தயாரான இந்திய விமானப்படை-சிஎன்என்

பாகிஸ்தானை தாக்க மாட்டோம், தாக்க மாட்டோம் என இந்தியா திரும்பத் திரும்ப உத்தரவாதம் அளித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானைத் தாக்க இந்திய விமானப்படை தயார்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு பென்டகன் அதிகாரிகள் 3 பேர் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க இந்திய விமானப்படை தயார்படுத்தப்பட்டது. உச்சகட்ட உஷார் நிலையில் இந்திய விமானப்படை வைக்கப்பட்டது. வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை இந்தியா தீவிரமாக கடைப்பிடித்திருந்தால் நிச்சயம், பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது முழு அளவிலான தாக்குதலை இந்திய விமானப்படைநடத்தியிருக்கும்.
ஆனால் அமெரிக்க மூத்த அதிகாரிகள் அமைதி காக்குமாறும், தாக்க வேண்டாம் எனவும் தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தியதால் தனது திட்டத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை என்று புஷ் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் இந்தியா தாக்குவதற்குத் தயாராக இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை விமானங்கள், லாகூர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து தாக்குதல் நடக்கலாம் என்ற பீதியில், ஷார்கோட், சர்கோதா ஆகிய இடங்களில் உள்ள தனது விமான தளங்களை பாகிஸ்தான் விமானப்படை உஷார்படுத்தியது.
ஆனால் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுறுவவில்லை என்று இந்தியா மறுத்தது. அதேபோல, தெரியாமல் உள்ளே வந்திருக்கலாம் என பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications