குறைந்த காற்றழுத்தம் நீடிக்கிறது - மழை படிப்படியாக குறையும்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.ஆர்.ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று முன்தினம் தென் மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காலை மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் அதையொட்டி உள்ள தென் மேற்கு வங்க கடலில் நீடிக்கிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக
மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும்.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மழை புதன்கிழமை முதல் படிப்படியாக குறைந்துவிடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 17 செ.மீட்டர் மழையும், அண்ணாமலை நகர் 13 செ.மீட்டர், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி 12 செ.மீட்டர், மயிலாடுதுறை 9 செ.மீட்டர், புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை தலா 7 செ.மீட்டர், தஞ்சாவூர் 6 செ.மீட்டர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 5
செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்றார்.