மங்களூர்: தேர்தல் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: திருமங்கலம் தொகுதியுடன் சேர்த்து மங்களூர் சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இவானூர் பஞ்சாயத்துத் தலைவர் ராமலிங்கம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், மங்களூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கே. செல்வம் வெற்றி பெற்றார். இது தனித் தொகுதியாகும்.
கடந்த நவம்பர் 11ம் தேதி செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார். இந்த செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்துள்ளது.
இதுகுறித்து செல்வத்திடம் கேட்டபோது, நான் பகுஜன் சமாஜ் கட்சியி்ல சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.
ஒரு கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்ப்டடவர், இன்னொரு கட்சியில் சேர்ந்து விட்டால் அவர் சட்டசபை உறுப்பினர் தகுதியை இழந்து விடுவார். இதுபற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே கடந்த மாதம் 11ம் தேதி முதல் மங்களூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கிறது.
திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசயம் மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
திருமங்கலம் தொகுதியுடன் சேர்த்து மங்களூருக்கும் இடைத் தேர்தல் நடத்தாவிட்டால் பெரும் பணச் செலவு ஏற்படும். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
எனவே திருமங்கலத்துடன் சேர்த்து மங்களூருக்கும் இடைத் தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று ராமலிங்கம் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாயா, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வக்கீல் காசிராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அரசு தரப்பில் பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜரானார். அப்போது அவர் வாதிடுகையில், மங்களூர் தொகுதி எம்எல்ஏ தனது ராஜினாமா கடிதத்தை உரிய முறையில் சபாநாயகரிடம் கொடுக்கவில்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுதாரர் தமது கோரிக்கையை உரிய அமைப்பிடம் தான் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த மனுவை உரிய காலத்துக்கு முன்பாக இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது.
மேலும் சட்டமன்றத்தின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications