சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் இலவசம்: அரசு

நேற்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கள் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனி தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்த நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், மா, வாழை, பலா என முக்கனித் தருக்களை நாட்டி, வண்ண வண்ண கோலங்களிட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட, புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும், சமத்துவ உணர்வு பரப்பியும், தமிழ்ப்புத்தாண்டு இதுவென துள்ளும் மகிழ்ச்சியால், அன்பை அள்ளிப் பொழிவர் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அதையொட்டி தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும், சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாட இருக்கிறார்கள்.
சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காயம் 20 கிராம் ஆகிய பொருட்கள், வாழ்த்துடன் கூடிய ஒரு தனிப்பையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1.1.09 முதல் 14.1.09 வரை இலவசமாக வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும், ரேஷன் கடைகளில் இந்த கால கட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சர்க்கரைப் பொங்கலுக்கான பொருட்கள் அடங்கிய பை ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications