பறவைக் காய்ச்சல்: அஸ்ஸாம், மே.வங்கக் கோழித் தீவனத்தை தமிழகம் கொண்டு வரத் தடை
சென்னை: அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழித் தீவனத்தை இறக்குமதி செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எனப்படும் பேர்ட் ப்ளூ வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அங்கு கோழிகளை கொன்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்ககளை அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், தமிழகத்தில் இதுவரை ஒருமுறை கூட பறவைக் காய்ச்சல் வந்ததில்லை.
தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கவுள்ளோம். ஒரு மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் வந்தால் அங்குள்ள கோழிகளை அடுத்த மண்டலத்திற்கு மாற்றி விடலாம். இதன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும்.
இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் வருகிற 26ம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. அதில், கோழி வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ள கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் எங்கும் பறவைக் காய்ச்சல் இல்லை. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. கோழிக்கறியையும், முட்டையையும் தாராளமாக சாப்பிடலாம்.
அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிய உடனேயே ஐந்து இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.
அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோழித்தீவனம் உள்ளிட்ட பல பொருட்களை வாங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications