கர்கரே மரணம் குறித்த சர்ச்சை-அந்துலே ராஜினாமா
டெல்லி: மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து சந்தேகம் எழுப்பி சிக்கலில் மாட்டிய மத்திய சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் அந்துலே பிரதமரி்ன் உத்தரவையடுத்து ராஜினாமா கடிதம் தந்துள்ளார்.
ஹேமந்த் கர்கரே உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று நேற்று கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்துலே.
அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதுதொடர்பாக லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையி்ல தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து பிரதமருக்கு அந்துலே நேற்று கடிதம் அனுப்பினார். அதில்,
ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை, சந்தேகப்படவில்லை. அதேபோல கர்கரேவின் தியாகத்தையும் நான் சந்தேகப்படவில்லை.
உண்மையில், கர்கரேவை குறி வைத்துக் கொள்ள தீவிரவாதிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. கர்கரே தீவிரவாதத்திற்குத்தான் பலியானா அல்லது தீவிரவாதத்தைத் தாண்டி வேறு காரணம் இருந்ததா என்பதுதான் எனக்குப் புரியாமல் உள்ளது.
சில வழக்குகளில் முஸ்லீம் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். தீவிரவாதத்தின் அடி ஆழத்திற்குச் செல்ல முயலும் யாரையும் தீவிரவாதிகள் நிச்சயம் குறி வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியிருந்தார் அந்துலே.
ஆனால், அந்துலேவின் விளக்கத்தை பிரதமர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் தேவையில்லாத பிரச்சனை கிளப்பி மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தியதாக அவரை சோனியாவும் கடிந்து கொண்டார்.
இதையடுத்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை அந்துலே பிரதமருக்கு அனுப்பினார்.












Click it and Unblock the Notifications