ராஜ்யசபாவில் கை நீட்டி பேச்சு-ஜெயா பச்சனுக்கு கண்டனம்
டெல்லி: ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, அவையை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே. குரியனை நோக்கி கையை நீட்டிப் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. நடிகை ஜெயா பச்சனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் நேற்று குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அவையை அப்போது பி.ஜே. குரியன் நடத்திக் கொண்டிருந்தார்.
விவாதத்தில் கலந்து கொண்டு சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி. வீரேந்திர பாட்டியா பேசினார். ஆனால் தனக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து பேச்ச முடிக்குமாறு குரியன் கோரினார். அப்போது கோபத்துடன் எழுந்த சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன், எங்களது கட்சி எம்.பி., பேசும் போது, பலர் குறுக்கிட்டுப் பேசினர். அதனால், அவருக்கு கூடுதல் நேரம் தர வேண்டும் என்றார்.
ஆனால் அக்கோரிக்கையை ஏற்க மறுத்த குரியன், வீரேந்திர பாட்டியா பேசியபோது, இடையூறு ஏற்படவில்லை. அவரும், உள்துறை அமைச்சரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். அந்த விவாதமும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயா பச்சன், என்னை நோக்கி நீங்கள் கையை நீட்டிப் பேச முடியாது என்றார். இதைக் கேட்டதும் கடுப்பான குரியன், நான் கையை நீட்டிப் பேசவில்லை. நீங்கள்தான் என்னை நோக்கி கையை நீட்டிப் பேசினீர்கள். உறுப்பினர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது ஒரு வழியாக பேச்சை முடித்துக் கொண்ட, வீரேந்திர பாட்டியா, சபையின் மூத்த உறுப்பினர் ஒருவரை நீங்கள் அவமானப்படுத்தி விட்டீர்கள் என்று குரியனை பார்த்துக் கூறினார். இதனால் மேலும் எரிச்சலைடந்த குரியன், சபைத் தலைவரின் மீது உறுப்பினர் குற்றம் சாட்டுவது முறையானது அல்ல. ஒதுக்கப்பட்ட ஏழு நிமிடத்திற்கு பதிலாக, சமாஜ்வாடி உறுப்பினர் 23 நிமிடம் பேசியுள்ளார். அப்படி இருந்தும் என் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல என்று கண்டிப்புடன் கூறினார்.
அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications