விழுப்புரம் அருகே 2 கல்லூரி பேருந்துகளுக்கு தீ!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ளது குளிச்சம்பளம். இங்கு பால்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் பால்ஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரி முதல்வர் ஆரோக்கியம். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் பிரின்சிபாலின் நடவடிக்கையை கண்டித்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் திரண்டு கல்லூரியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் சென்று முற்றுக்கையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
அப்போது கல்லூரி முதல்வரை எதிர்த்து சிலர் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந் நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகளுக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
பேருந்துகள் எரிவதை கண்ட கல்லூரி வாட்ச்மேன் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். கிளியனூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால், அதற்குள் ஒரு பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது. மற்றொரு பேருந்து பாதி எரிந்த நிலையில் தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.