தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் கடலோர கமாண்ட்கள்
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஒருங்கிணைந்த கடலோர கமாண்ட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது இதேபோன்ற ராணுவ கமாண்ட்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் உள்ளன. இங்கு ராணுவம், மத்திய புறக்காவல்படை, புலனாய்வு அமைப்புகள், மாநில போலீஸாரை இணைத்து இந்த கமாண்ட் செயல்பட்டு வருகிறது.
அதேபோல கடற்படை, கடலோரக் காவல்படை, மாநில கடலோரப் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் இணைந்த அமைப்பாக புதிய கடலோர கமாண்ட்கள் செயல்படும்.
தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இத்தகைய கமாண்ட்கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே தேசிய அளவில் கடலோர கமாண்ட் ஒன்று அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
மாநிலங்களில் அமைக்கப்படும் கடலோர கமாண்ட்களின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் அல்லது தலைமைச் செயலாளர் செயல்படுவார். செயல் தலைமைப் பொறுப்பை, பிராந்திய கடற்படை அல்லது கடலோரக் காவல் படைத் தலைவர் வகிப்பார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த புதிய கமாண்ட்கள் அமைக்கப்படும்.