கிளிண்டன் பவுன்டேஷனுக்கு அமர்சிங் நிதியுதவி - விசாரிக்க பாஜக கோரிக்கை

முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் நல்ல நட்பு கொண்டவர் அமர்சிங். இந்த நட்பைப் பயன்படுத்தித்தான் கடந்த 2005ம் ஆண்டு உ.பி முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோது, கிளிண்டனின் இந்திய பயணத்தின்போது, அவரை உ.பி.க்கு வரவழைத்து மாநில அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தொடங்கச் செய்தார்.
இந்த நிலையில், கிளிண்டனின் அறக்கட்டளைக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் டாலர்கள் வரை நிதியுதவியையும் அவர் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிளிண்டன் அறக்கட்டளையின் இணையதளம் தங்களுக்கு நிதியுதவி செய்தோரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமர்சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
500 மில்லியன் டாலர் மதிப்புடையது கிளிண்டன் அறக்கட்டளை. ஹில்லாரி வெளியுறவு அமைச்சராகவிருப்பதால், இந்த அறக்கட்டளைக்கு வரும் நன்கொடைகள் குறித்து சர்ச்சை எழுந்தது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெருமளவில் நிதி பெறப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.
இதையடுத்து அறக்கட்டளைக்கு யார் யார் நிதி தருகிறார்கள், எங்கிருந்து வருகிறது என்ற முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என ஹில்லாரியை, அதிபராகப் பதவியேற்கவுள்ள பாரக் ஓபாமா கேட்டுக் கொண்டார். இதையடுத்து கிளிண்டன் அறக்கட்டளையின் நன்கொடையாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமர்சிங், இந்திய தொழிலக சம்மேளனம், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் லலித் சூரி, வினோத் குப்தா, ரிலையன்ஸ் ஐரோப்பா நிறுவனத்தின் அஜீத் குலாப்சந்த், ரான்பாக்ஸி பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள் என்ற விவரத்தை அறக்கட்டளை வெளியிடவில்லை.
தனது அரசுக்குப் பின்னால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஓபாமா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆனால் இது அமர்சிங்குக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கிளிண்டன் அறக்கட்டளைக்கு இவ்வளவு பணத்தை அமர்சிங் கொடுத்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதை நிச்சயம் விசாரிக்க வேண்டும். அவர் அன்னியச் செலாவணி சட்ட விதிகளை மீறியுள்ளாரா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications