For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமங்கலம் தொகுதியில் அழகிரிக்கு தடை கோரும் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை திருமங்கலம் தொகுதிக்குள் முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிமுக ராஜ்யசபா எம்பிக்களான மைத்ரேயன், மலைச்சாமி, பாலகங்கா ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில்,

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தாக்கப்பட்டார். மேலும் அதிமுக தொண்டர்கள், வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டன. மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்த வன்முறைகளுக்கு அழகிரி தான் காரணம்.

இப்போது திருமங்கலம் தொகுதியிலும் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபடுவார்கள். காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 1,405 பேரில் 124 பேர் மதுரை சிறையில் இருந்து விடுதலையானவர்கள்.

திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற மதுரை மத்திய சிறையில் இருந்து எந்த கைதியையும் ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்யக் கூடாது. எந்த ஒரு ரவுடியையும் திருமங்கலம் தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக, எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்.

போலீஸ் அதிகாரி சட்டப்பூர்வமான கடமையை செய்யத் தவறினாலோ, அதிமுக தொண்டர்கள் மீது எந்த அடிப்படையும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்தாலோ, அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்களாக கருதப்படுவார்கள் என்று அறிவுறுத்த வேண்டும்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த வேண்டும். தைரியமான, நேர்மையான அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக தொகுதியில் நிறுத்த வேண்டும்.

நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதற்கு வாக்குச் சாவடிகளில் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படையினர் வாக்காளர்கள், அடையாள அட்டையுடன் வாக்களிப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மொத்தத்தில், திருமங்கலம் இடைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தொகுதிக்குள் நுழைய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் நகல் தலைமைத் தேர்தல் ஆணையம் கோபால்சுவாமிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X