கோவாவில் புத்தாண்டு கடற்கரை விருந்து நிகழ்ச்சிகளுக்குத் தடை
பனாஜி: கோவா கடற்கரையில், இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்ட இரவு விருந்துகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கோவா கடற்கரைகள், விருந்து நிகழ்ச்சிகளுக்குப் புகழ் பெற்றவை. ஆனால் மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கோவாவுக்கும் தீவிரவாத தாக்குதல் மிரட்டல் நிலவுகிறது.
இதன் காரணமாக கோவா மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், புத்தாண்டின்போதும், கிறிஸ்துமஸின்போதும் கடற்கரைகளில் விருந்துகளை நடத்த மாநில அரசு தடை செய்துள்ளது.
டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை கடற்கரைகளில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத் தாக்குதல் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் வரவில்லை என்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கோவா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், கிறிஸ்துமஸின்போது நடத்தப்படும் நள்ளிரவு பிரார்த்தனை உள்ளிட்ட மத நிகழ்ச்சிகளுக்கு இந்த தடை பொருந்தாது.
மேலும், கோவாதான் தங்களது அடுத்த குறி என்று மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி கஸாப் கூறியுள்ளதாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தி தங்களுக்கு கவலை அளிப்பதாகவும் கோவா அரசு தெரிவித்துள்ளது.
கோவா மாநில பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 2 பட்டாலியன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை கோவா மாநில அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது.
இதற்கிடையே கோவா அரசின் இந்த கடற்கரை விருந்து நிகழ்ச்சிகளுக்கான தடை அம்மாநில சுற்றுலாத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பார்ட்டிகளுக்கு புக்கிங் முடிந்து விட்ட நிலையி்ல இப்போது தடை விதித்திருப்பது தங்களது பிசினஸை வெகுவாக பாதிக்கும் என்கிறார் கோவா மாநில சுற்றுலா மற்றும் சுற்றுப்பயண சங்கத்தின் தலைவர் ரால் டிசவுசா.












Click it and Unblock the Notifications