போலியோ: ஜெயா டிவி திட்டமிட்டு பரப்பிய வதந்தி-அரசு
சென்னை: போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தைகள் இறந்ததாக பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். ஜெயா டிவி திட்டமிட்டு செய்யும் செயல் இது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து திட்டமிட்டபடி கொடுக்கப்பட்டது.
நேற்று காலை 11 மணியளவில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு குழந்தை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு இறந்து போனதாக ஜெயா டிவி என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி பரப்பியது. இது திட்டமிட்டு மக்களிடையை பரப்பப்பட்ட வதந்தி. இதனால் மக்கள் மத்தியில் அது பீதியையும், கலவரத்தையும் உண்டாக்கியது.
ஈரோடு மாவட்டத்தில் இறந்து போனதாக கூறப்பட்ட குழந்தை மூளை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 157 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தக் குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர்.
உண்மை இவ்வாறிருக்க ஜெயா டிவி பரப்பிய தவறான செய்தியால், சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என அச்சமுற்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக விரைந்தனர்.
அத்தியாவசியத் தேவையான போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் ஜெயா டிவி பொய்ச் செய்தியைப் பரப்பி ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களைக் கலவரப்படுத்தி பதறச் செய்தது கண்டிக்கத்தக்கதாகும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications