தேர்தலில் வாஜ்பாய் போட்டியிட செய்ய பாஜக முயற்சி?

பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு 7 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்ற பின் அவர் தீவிர அரசியலிருந்து ஒதுங்கிவிட்டார்.
அவரது இரு கால் மூட்டுகளிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாலும் உடல் நலம் காரணமாகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவரை பாஜகவில் ஒரு தரப்பு ஒதுக்கி வைத்துள்ளதே உண்மை.
இதையடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
ஆனால், சமீபத்திய 5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் மக்களவைத் தேர்தலுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்துவிட்டன. இந்தத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை.
மேலும் முக்கியமான மாநிலங்களில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் பிற கட்சிகள் தயாராக இல்லை. குறிப்பாக ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஹரியாணாவில் செளதாலா ஆகியோர் ஒதுங்கிவிட்டனர்.
இதனால் வரும் தேர்தலை ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் மட்டுமே இணைந்து சந்திக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
சுமார் 90 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்திலும் உத்தராஞ்சலிலும் பாஜக, காங்கிரசுக்கு வெல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவே. அங்கு மாயாவதியின் ஜாலம் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனால் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் சுமார் 220 முதல் 240 இடங்கள் வரை பாஜக கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது. மிச்ச இடங்களைத் தான் கூட்டணிக் கட்சிகளை வைத்து சமாளிக்கலாம்.
ஆனால், இப்போதுள்ள சூழலில் கூட்டணியி்ல் பலமான கட்சிகள் இல்லாமல் 220 இடங்களில் வெற்றி என்பதே பாஜகவுக்கு சந்தேகத்திற்கிடமானது தான்.
இந் நிலையில் வாஜ்பாயை மீண்டும் கட்சியில் முன்னிருத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் லால்ஜி தண்டன் கூறுகையி்ல், வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றார்.
இது குறித்து இன்னொரு மூத்த தலைவரான வெங்கையா நாயுடு கூறுகையில், தேர்தலில் வாஜ்பாய் போட்டியிடும் விஷயத்தில் எந்த வேறுபாடான கருத்தும் இல்லை. அது குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
தேர்தலில் வாஜ்பாய் முன்னிருத்தப்பட்டால் அத்வானி அடக்கி வாசிக்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதை அத்வானி தரப்பு ஏற்காது. இதனால் தனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாத நிலையில் தேர்தலில் போட்டியிட வாஜ்பாய் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது.
வாஜ்பாய் பிறந்த நாள் ரத்து:
இதற்கிடையே மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை வாஜ்பாய் ரத்து செய்துள்ளார்.
அவரது பிறந்த நாள் டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று வருகிறது.
இந்த ஆண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தை வாஜ்பாய் ரத்து செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications