கட்டணத்தைக் குறைக்க முடியாது-கிங்பிஷ்ஷர் அடம்!!
மும்பை: விமான எரிபொருளுக்கான வரிகள் மற்றும் விலைக் குறைப்பை மத்திய அரசு அறிவித்தாலும், இப்போதைக்கு கட்டணத்தைக் குறைப்பதாக இல்லை என விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து 7 வது முறையாக விமான எரிபொருளுக்கான விலையை மத்திய அரசு குறைத்து அறிவித்தது. இதன் அடிப்படையில் விமான நிறுவனங்களின் பயணிகளின் கட்டணத்தை குறைக்கும்படியும், அரசு அளித்த சலுகைகல் பயணிகளுக்கும் சேரவேண்டும் என்றும் பிரபுல் பட்டேல் கேட்டுக் கொண்டார்.
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் நேரடி விலை குறைப்பில் ஈடுபடாமல் பரிமாற்றுக் கட்டணத்தில் ஓரளவு குறைப்பதாக அறிவித்தன. அரசுக்கு சொந்தமான இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா மற்றும் இந்தியனில் கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. ஜெட் ஏர்வேஸும்கூட கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் விமான நிறுவனமான கிங்பஷர் மட்டும் கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து, கிங்பிஷ்ஷர் உடனடியாக விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்தார் பிரபுல் படேல்.
கிங்பிஷ்ஷரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
விமான எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாதபோது எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை இப்பொழுதுதான் சிறிதளவு போக்கி வருகிறோம். பல எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக கடன் பாக்கி இன்னும் இருக்கிறது. எரி பொருளுக்கான விலை மேலும் குறையும் பட்சத்தில் இது பற்றி கலந்து ஆலோசிக்க உள்ளோம். இதனால் தற்போதைக்கு விமான பயணக்கட்டணம் குறைய வாய்ப்புகள் இல்லை. மக்களும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.