மாயாவதி பிறந்த நாள் விருந்துக்கு பணம் தராத என்ஜீனியர் கொலை
உ.பி. அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் மனோஜ் குப்தா. இன்று காலை, அரயா மாவட்டத்தில் அவர் அடித்துக் கொல்லப்பட்டார். உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ சேகர் திவாரியின் ஆட்கள்தான் அவரை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனவரி 15ம் தேதி மாயாவதியின் பிறந்த நாள் வருகிறது. இதை சேகர் திவாரியின் ஆட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டனர். இதையடுத்து நிதி வசூலிப்பி்ல் இறங்கினர். என்ஜீனியர் குப்தாவிடமும் பெரும் பணம் கேட்டு நெருக்கி வந்துள்ளனர். ஆனால் அவர் பணம் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் கொன்று விட்டதாக என்ஜீனியரின் குடும்பத்தினர் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படுகொலை தொடர்பாக போலீஸார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்ததாக தெரியவில்லை.
மாயாவதியின் பிறந்த நாள் விழாவுக்கு பணம் தர மறுத்ததற்காக பொதுப்பணித்துறை பொறியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.