என்ஜீனியர் கொலை: எஸ்பி பந்த்-ரயில்கள் முடக்கம்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவால் பொதுப்பணித்துறை என்ஜீனியர் மனோஜ் குப்தா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உ.பியில் இன்று சமாஜ்வாடிக் கட்சியினர் நடத்திய பந்த்தின்போது வன்முறை வெடித்தது. பல ஊர்களில் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
மதுரா, மணிப்பூரி, இடாவா, அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்களை தடுத்து நிறுத்தி சமாஜ்வாடி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுராவில் 20க்கும் மேற்பட்ட சமாஜ்வாடி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அலகாபாத், இடாவா, மணிப்பூரி, அலிகார், அவுரியா ஆகிய நகரங்களில் சமாஜ்வாடி கட்சியினர் பேரணிகள் நடத்தினர். அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. திறந்திருந்த கடைகளையும் அடைக்குமாறு கூறி சமாஜ்வாடி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர்.
அவுரியாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கமலேஷ் பதக் தலைமையில் நடந்த ஊர்வலத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும், ஊர்வலத்தில் சென்றவர்கள் மாயாவதியின் கொடும்பாவியை எரிக்க முயன்றதால் அங்கு அமளி துமளி நிலவியது. போலீஸார் கூட்டத்தினரை தடியடி நடத்திக் கலைத்தனர்.
ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா
லக்னோவில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு சமாஜ்வாடிக் கட்சியினர், மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி தர்ணாவில் இறங்கினர். சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் சிவபால் சிங், எம்.பியும், முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
மாயாவதி ஆலோசனை
இந்த நிலையில், மோதல்கள் வெடித்திருப்பதைத் தொடர்ந்து முதல்வர் மாயாவதி, மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில சட்டம் ஒழுங்கு குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ சேகர் திவாரியின் செயலால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக இன்று பிற்பகல் மாயாவதி அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications