திருமங்கலம்: பாஜக ஆதரவு யாருக்கு?

பாஜகவின் மாநில செயற்குழு வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது. அதில் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் இல.கணேசன் தலைமையில் நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விடுதலைப் புலிகள் விஷயத்தில் தமிழகத்தில் ஒரு தரப்பினர் புலிகளுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர்
எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழ் ஈழ மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலை.
மேலும், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை கண்டறிய ஐ.நா. சார்பில் உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப வேண்டும்.
பாஜகவின் மாநில செயற்குழு வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. அன்று திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்று பாஜக முடிவு செய்யும் என்றார்.
அந்தக் கட்சியின் ஆதரவு அதிமுக அல்லது தேமுதிகவுக்குக் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
71 பூத்கள் பதற்றம் நிறைந்தவை:
இதற்கிடையே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பூத் அமைக்கப்படுகிறது. மொத்தமுள்ள 190 பூத்களில் 71 பூத்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும் டி.எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மற்றும் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக 200 இன்ஸ்பெக்டர்கள், 300 எஸ்.ஐகள், 18 மொபைல் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக தென்மாவட்ட போலீசார் ஆயிரம் பேரை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்பெக்டர் சுலைமான், எஸ்.ஐ பாஸ்கரன் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பிரிவும் துவங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications