ஆப்கானில் தமிழக வாலிபர் கடத்தல்-ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேடோ படைகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் சப்ளையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த சைமன் பரமானந்தன் (38) ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இத்தாலிய உணவு நிறுவனமான பியானோவில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். இது இத்தாலி வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உணவு நிறுவனம்.
கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி இவர் பக்ராம் விமானத் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இத்தாலிய படையினருக்கு உணவு எடுத்துச் சென்றபோது தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இந்த விவரம் இப்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது.
இவரது சகோதரர் சுப்பிரமணியமும் காபூல் நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சைமனை கடத்திய தீவிரவாதிகள் அவரை அவரது சகோதரருடன் பேச அனுமதித்தனர்.
இதையடுத்து மறுநாளே, சுப்பிரமணியன் காபூலில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பின் தீவிரவாதிகளிடமிருந்து அவ்வப்போது போன் அழைப்புகள் சுப்பிரமணியனுக்கு வர ஆரம்பித்தன.
அப்போது சகோதரரிடம் பேசிய சைமன் தன்னை தீவிரவாதிகள் கட்டிப்போட்டு சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், பனி உறைந்து கிடக்கும் வெட்ட வெளிப் பகுதியில் வைத்திருப்பதாகவும் கதறினார்.
இதன்பின் தீவிரவாதிகள் சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு சைமனை விடுவிக்க பணம் தரவேண்டும் என்று மிரட்டினர்.
கடைசியாக கடந்த 21ம் தேதி சுப்பிரமணியனிடம் பேசிய அவர்கள் சைமனை விடுவிக்க வேண்டுமானால் இன்னும் ஒரு வாரத்திற்குள் ரூ. 25 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
இந்தக் கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதனால் சைமனின் குடும்பத்தினர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து சைமனின் மனைவி வசந்தி கூறுகையில், எனது கணவர் ஒரு வருடத்திற்கு முன் ஆப்கானிஸ்தான் சென்றார். தீவிரவாதிகள் கேட்கும் பணத்தை கொடுக்கும் சக்தி எங்களிடம் இல்லை. என் கணவரை அவர் வேலை பார்த்த நிறுவனம் தான் மீட்க வேண்டும். இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவிததார்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்களை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்துவது இது 3வது முறை. இதற்கு முன்பு சாலைப் பணியாளர் எம்.ஆர்.குட்டி என்பவரையும், சூரியநாராயணன் என்ற என்ஜினீயரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொன்று விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications