நியூசிலாந்தில் வேலை: ரூ24 லட்சம் மோசடி-ஏஜென்ட் கைது
சென்னை: நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 24 லட்சம் மோசடி செய்த ஏஜென்ட்டை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (25). இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், சென்னை அம்பத்தூரில் செயல்பட்டுவரும் எக்ஸ்சலண்ட்' டிராவல்ஸ் என்ற நிறுவனம் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தியது. இதை பார்த்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் காசிநாதனை அணுகினேன். அவர், என்னை நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறினார்.
இதற்காக என்னிடம் பெரிய அளவில் பணம் வாங்கினார். பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார்.
இதேபோல, தேனி மாவட்டத்தை சேர்ந்த கேசவன், ராஜேஷ்குமார், விஜயராகவன், பாலமுருகன் ஆகியோரிடமும் காசிநாதன் நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றார். மொத்தம் ரூ.24 லட்சம் வாங்கிக்கொண்டு எங்களை தாய்லாந்து அழைத்து சென்றார்.
தாய்லாந்து நாட்டில் பதிவு செய்து அங்கு விசா வாங்கித் தருவதாக கூறினார். போலி விசாவை வாங்கி எங்களிடம் கொடுத்துவிட்டு, இதன் மூலம் நியூசிலாந்து செல்லலாம் என்று தெரிவித்தார். ஆனால் எங்களை அழைத்துச் செல்லாமல், தாய்லாந்திலேயே தவிக்க விட்டு விட்டு, காசிநாதன் தப்பி வந்துவிட்டார். அதன் பின்னர் நாங்கள் பெரும் சிரமப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தோம்.
மோசடியில் ஈடுபட்ட காசிநாதன் மீதும், அவருடைய கூட்டாளிகள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.
புகாரை விசாரித்த போலீஸார் காசிநாதனைக் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications