இந்திய ஏவுகணைகளை செயலிழக்க வைப்பேன்: பாக். ஜோதிடர் 'புருடா'!
டெல்லி: இந்தியாவிடம் உள்ள அனைத்து ஏவுகணைகளையும் செயலிழக்க வைக்கும் 'பவர்' என்னிடம் உள்ளது. எனவே பாகிஸ்தான் ராணுவம் கவலைப்பட வேண்டாம் என பாகிஸ்தான் ஜோதிடர் ஒருவர் 'புருடா' விட்டுள்ளார்.
பாகிஸ்தானை இந்தியா தாக்குமா, தாக்காதா என்பது குறித்து பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பாகி்ஸ்தானைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் தன் பங்குக்கு சில 'புருடா'க்களை எடுத்து விட்டு பாகிஸ்தான் மக்களை 'குஷி'ப்படுத்த முயன்றுள்ளார்.
அவரது பெயர் பசல் கரீம். இவர் ஒரு ஜோதிடர் மற்றும் கைரேகை நிபுணர். இவர் கூறியுள்ள தகவலைக் கேட்டால், பதட்டத்துடன் உள்ள சர்தாரி கூட வாய் விட்டுச் சிரிப்பார். அப்படி ஒரு 'பயங்கர' தகவலை பசல் கரீம் வெளியிட்டுள்ளார்.
பசல் கரீம் சொல்வதுதான் என்ன...
இந்திய ஏவுகணைகளை ஒட்டுமொத்தமாக செயலிழக்க வைக்கும் சக்தி என்னிடம் உள்ளது. எனவே பாகிஸ்தான் ராணுவம் கொஞ்சமும் அஞ்சத் தேவையில்லை.
இந்தியா, அந்நாட்டில் உள்ள தலை சிறந்த ஜோதிடர்களைக் கூப்பிட்டு நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போது தாக்கலாம் என்பதற்கு நேரம் குறித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல இந்தியாவைச் சேர்ந்த மந்திரவாதிகள், ஜோதிடர்கள், காளியின் அருளை இந்தியாவுக்குப் பெற்றுத் தர முயன்று கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் அரசியல்வாதிகளையும், ராணுவ தளபதிகளையும் தண்டிக்குமாறு காளியிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் நாம் பயப்படத் தேவையில்லை. எனது மந்திரத்தாலும், சக்தியாலும், பாகிஸ்தான் மீது யார் போர் தொடுத்தாலும் அவர்களை சக்தியிழக்க வைக்க என்னால் முடியும். எனது அரிய சக்திகளைக் கொண்டு இந்திய ஏவுகணைகளை நான் செயலிழக்க வைத்து அழித்து விடுவேன் என்று கூறியுள்ளார் கரீம்.
கரீமின் இந்த 'ஜாலி' பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் சிலர் கேட்டபோது, பலமாக சிரித்த பிரசாத், இப்படிப்பட்ட 'சக்தி வாய்ந்த' மந்திரவாதிகள் நம்மிடம் இல்லாமல் போய் விட்டார்களே என்றார்.












Click it and Unblock the Notifications