ஜம்மு காஷ்மீர்: தேசிய மாநாடு - காங். கூட்டணி ஆட்சி?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. யாரும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், காங்கிரஸுடன் இணைந்து தேசிய மாநாடு கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் உள்ள 87 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.

22 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி நடந்தது.

ஆசாத் மீண்டும் வெற்றி

முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத், பதேர்வா தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

இதே தொகுதியில்தான் கடந்த 2006ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் ஆசாத் வெற்றி பெற்றார்.

உமருக்கு ஒரு வழியாக வெற்றி

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், தற்போதைய எம்.பியுமான உமர் அப்துல்லா, கடந்த 2002ம் ஆண்டு தோல்வியைத் தழுவிய காந்தேர்பால் தொகுதியில் இம்முறை வெற்றி பெற்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002ம் ஆண்டுதான் முதல் முறையாக உமர் அப்துல்லா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஜனநாயகக் கட்சியின் காஸி முகம்மது அப்சல், உமரைத் தோற்கடித்தார்.

இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் மீண்டும் காந்தேர்பால் தொகுதியில் போட்டியிட்டார் உமர். அவரை எதிர்த்து அப்சலே போட்டியிட்டார்.

2002ல் ஏற்பட்ட தோல்விக்குப் பழி வாங்கும் வகையில் அப்சலை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார் உமர்.

இந்த வெற்றி குறித்து உமர் கூறுகையில், கடந்த முறை மக்கள் கோபத்தில் இருந்தனர். அதனால்தான் நான் தோல்வியுற்றேன். ஆனால் அந்தக் கோபத்தை துடைக்க எனக்கு மக்கள் இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கருதித்தான் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டேன். மக்களின் கோபம் போய் விட்டதை இப்போது உணர்ந்துள்ளேன் - இந்த வெற்றியின் மூலமாக என்றார்.

காந்தேர்பால் தொகுதி அப்துல்லா குடும்பத்தின் செல்லத் தொகுதியாகும். இதே தொகுதியில்தான் உமரின் தந்தையான டாக்டர் பரூக் அப்துல்லா 1983ம் ஆண்டு முதல் 96 வரை உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். உமர் அப்துல்லாவின் தாத்தாவான ஷேக் அப்துல்லாவும் இதே தொகுதியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹபூபா வாசியில் வெற்றி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வாசி தொகுதியில் போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மஹபூபா முப்தி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 28 இடங்களில் வெற்றி கிடைத்தது. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அது உருவெடுத்துள்ளது.

2வது இடம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு 21 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 17 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

பாஜகவுக்கு பெரிய வெற்றி

யாரும் எதிர்பாராத வகையில் பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு ஒரே ஒரு தொகுதிதான் கிடைத்தது. இந்த முறை கூடுதலாக 10 தொகுதிகளை அது பெற்றுள்ளது.

பிற சிறிய கட்சிகள், சுயேச்சைகள் 10 இடங்களில் வென்றுள்ளனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கணிசமான தொகுதிகள் கிடைத்தன. கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக 5 தொகுதிகளை இது கைப்பற்றியுள்ளது.

அதேசமயம், ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவின் ஆதிக்கம் கையோங்கியிருந்தது. இங்கு காங்கிரஸின் வாக்கு வங்கியை பாஜக காலி செய்துள்ளது.

கடந்த தேர்தலை விட 3 இடங்கள் குறைவாக வென்றுள்ளது காங்கிரஸ்.

தேசிய மாநாடு - காங். கூட்டணி

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியமைக்கும் எனத் தெரிகிறது. உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகளும் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+