நெல்லையில் மீண்டும் பீகார் கொள்ளையர்கள் அட்டகாசம் -போலீஸ் வலை
நெல்லை: நெல்லையில் சமீப காலமாக நடந்து வரும் கொள்ளைச் சம்பவங்களுக்கு பீகார் கும்பலே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
பாளையில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. கிறிஸ்துமஸை ஓட்டி சர்ச்சுக்கு சென்றவர்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
கடந்த 23ம் தேதி இரவு பாளை டக்கம்மாள்புரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மதபோதகர் விக்டர் இம்மானுவேல்ராஜ் என்பவரின் வீ்ட்டு கதவை உடைத்து நகை, ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
அதே பகுதியை சேர்ந்த கல்லூரி ஊழியர் டேனியல் வீட்டிலும் 3 பவுன் நகை, 5 ஆயிரம் கொள்ளை போனது.
பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த பவுல் என்பவர் 24ம் தேதி இரவு சர்சுக்கு சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பிரோவிலிருந்த 38 பவுன் நகை, 40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் ஆகும்.
பெருமாள்புரத்தை சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி ஞானராஜ் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.அப்போது வீட்டிலிருந்து 3 பவுன் நகை, 1000 ரொக்க பணம், செல்போன்கள், வீடியோ கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நெல்லை மாநகரில் மீண்டும் தலைதூக்கியுள்ள தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கைரேகைகளை சேகரித்த போலீசார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைவரிசை காட்டிய பீகார் கொள்ளையர்களை சந்தேகிக்கின்றனர்.
நெல்லையில் பொம்மை, போர்வை வியாபாரம் செய்வது போல் வந்து தங்கியிருக்கும் அவர்கள் பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டுவர்.
ஒன்று, இரண்டு மாதங்கள் தங்கியிருக்கும் இவர்கள் கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு பீகாருக்கு சென்று விடுவார்கள்.
2 ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் இதுபோல் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை நடந்தது. ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. தற்போது நடந்துள்ள சம்பவங்களிலும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.












Click it and Unblock the Notifications