புலிகள் தாக்குதலில் 68 ராணுவ வீரர்கள் பலி
முல்லைத்தீவு: முல்லைத் தீவில் ஊடுறுவ முயன்ற இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 68 ராணுவத்தினர் பலியானார்கள். 75 பேர் காயமடைந்தனர். 17 ராணுவ வீரர்களின் உடல்களை புலிகள் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவை நோக்கி இலங்கை படையினர் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆர்ட்டிலரி மற்றும் பலகுழல் வெடிகணைகளுடனும், கனரக போர்க் கருவிகளின் உதவியுடனும் தாக்குதல் நடத்தியபடி முன்னேற முயன்றனர்.
இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை மேற்கொண்டனர். பிற்பகல் 1 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் ராணுவத்தினரின் முன்னேற்றம் முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 50 ராணுவத்தினர் பலியானார்கள். 75 வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் 16 பேரின் உடல்களை புலிகள் கைப்பற்றினர்.
இதுதவிர ஏராளமான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலையும் புலிகள் முறியடித்தனர்.
இதில் 18 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 9 வீரர்களின் உடல்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
குடியிருப்புகள் மீது விமான தாக்குதல்:
முன்னதாக முல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு என்ற இடத்தில், மக்கள் குடியிருப்புகளை குறி வைத்து இலங்கை விமானப்பட நடத்திய வெறித்தாக்குதலில் 2 சிறார்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கும், பின்னர் 1 மணிக்கும் இலங்கை விமானப்படையினர் ஐந்து முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இதில், சத்தியசீலன் சத்தியராஜ் (17), விதுசாயினி (10) மற்றும் செல்வராஜா செல்வறஞ்சன் (4) ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications