தடாகம் கோவில் பாதையில் குடிகாரர்கள் அட்டகாசம்
கோவை: கோவை தடாகம் வனப்பகுதியில், பொன்னூத்து அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையை குடிகாரர்கள் தங்களது 'பார்' ஆக மாற்றியிருப்பதால் கோவிலுக்கு போகும் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை தடாகம் அருகே மலைப் பகுதியில் அமைந்துள்ளது பொன்னூத்து அம்மன் கோயில். இந்த கோவில் அமைந்துள்ள வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு செல்ல தடை உள்ளது.
ஆனால் அதை யாரும் மதிப்பது இல்லை. பிளாஸ்டிக் குவியல்கள் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி வருகின்றன.
இது போதாதென்று குடிகாரர்களின் அட்டகாசமும் இப்போது அதிகரித்துள்ளது.
விடுமுறை நாள்களில் கோயிலுக்கு வரும் சிலர், வனப் பகுதியிலேயே மது அருந்திவிட்டு பக்தர்களிடம் தகராறில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களை அங்காங்கே உடைத்து சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி வருகின்றனர்.
அம்மனை தரிசிக்க வருபவர்களுக்கு வனத்துறையினரும், காவல்துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் பக்தர்கள்.
பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தால்தான் வன வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களை நுழையவிடாமல் தடுப்பது வனத் துறையினரின் கடமை என்கிறார் ஓசை சுற்றுச் சூழல் அமைப்பு தலைவர் காளிதாஸ்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அன்வர்தீனிடம் கேட்டால், பொன்னூத்து அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படுவதுடன் அங்கு மது அருந்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக், பாலிதீன் பொருள்களை வனப் பகுதிக்குள் பயன்படுத்த தடையுள்ளது. இத் தடை தீவிரமாக அமலாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications