ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ரெய்டு - 30 புரோக்கர்கள் கைது
கரூர்: கரூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் இன்று காலை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில், 30 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் ஆர்.டி.ஓ. ராஜ்கபூர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை பின்னர் போலீஸார் மறுத்து விட்டனர்.
தமிழகம் முழுவதும் லஞ்ச வேட்டையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் ரெய்டு நடந்தது.அப்போது ஆர்.டி.ஓ. ராஜ்கபூரிடம், கணக்கில் வராத பெரும் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜ்கபூரையும், அவரது உதவியாளர் சேவியரையும் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இருவரும் கைது செய்யப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்.டி.ஓ. கைது செய்யப்படவில்லை என்று பின்னர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், 30 புரோக்கர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்சம்-19 சர்வேயர்கள் இடமாற்றம்:
இதற்கிடையே லஞ்சப் புகார் எதிரொலியாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 சர்வேயர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணம் பிடிபட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ராவுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
அதன்படி தாலுகா அலுவலகங்களில் உள்ள சர்வேயர்களை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நில அளவை துறை உதவி இயக்குனருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய 19 சர்வேயர்களை இட மாற்றம் செய்து நில அளவை துறை உதவி இயக்குனர் மதனகோபால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications