எம்பி கார்வேந்தன் மீண்டும் கொலை மிரட்டல்
தாராபுரம்: காங்கிரஸ் எம்பி கார்வேந்தனுக்கு தொலைபேசி மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பழனி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பியான கார்வேந்தனின் வீடு தாராபுரத்தில் மேற்கு கச்சேரி வீதியில் உள்ளது. இவர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர். கடந்த 25ம் தேதி அதிகாலை சிலர் காங்கிரஸ் கொடிகளை எரித்து இவரது வீட்டுக்குள் வீசிவிட்டு சென்றனர். கூடவே ஒரு கடிதமும் கிடந்தது.
அதில், ''சட்டசபையில் 50 ஆண்டு பொன்விழா கண்ட கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறாய். சோனியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்காமல் கருணாநிதிக்கு விருது வழங்குமாறு கேட்டிருக்கிறாய். நீ எவ்வளவு தான் பாதுகாப்புடன் இருந்தாலும் இனி நீதான் எங்களது முதல் குறி'' என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கார்வேந்தன், திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க இந்த செயலில் யாரோ ஈடுபட்டிருக்கலாம். அல்லது பெரியார் தி.கவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இது நடந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில், நேற்று அவரது வீட்டுக்கு மீண்டும் டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு வந்த இந்த தொலைபேசி அழைப்பை எம்பியின் உதவியாளர் நடராஜன் அட்டென்ட் செய்தார்.
எதிர்முனையில் செல்போனில் பேசிய அந்த நபர், கார்வேந்தனை மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அவருக்கு மிரட்டல் விடுத்துவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து அந்த நம்பரை நடராஜன் தொடர்பு கொண்டு நீ யார் என்று விசாரித்தார். அப்போது அந்த நபர், நாளை (இன்று) நேரில் வந்து எம்பியை குத்திக் கொலை செய்வேன், என்ன பாதுகாப்பு இருந்தாலும் சரி, அவரை குத்திக் கொல்வேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான்.
இது குறித்து போலீசாருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அந்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கார்வேந்தனின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து:
இதற்கிடையே திமுக தலைவராக 10வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதிக்கு தமிழகம், புதுவை காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், புதுவை மாநில முதல்வர் வைத்தியலிங்கம், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications