For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவினர் தயாரா?-தா.பாண்டியன் சவால்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் சமூக விரோதிகள் இல்லாமல் அமைதியாக நடைபெற வேண்டுமானால், இந்த தொகுதியில் போலீஸ் துறையை தேர்தல் கமிஷன் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

திருமங்கலம் தொகுதியில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிமுகவினரை தாக்கி விட்டு அவர்கள் மீதே வழக்கும் போட்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து உதைத்துக் கொண்டபோது போலீசார் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களோ, அதைவிட காய்ந்த மரம் போல இங்கே நின்று வேடிக்கை பார்த்திருருக்கிறார்கள்.

தேர்தல் நடக்கும்போது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் திருமங்கலம் தொகுதியில் மிசா பாண்டியன் துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார். இது ஆயுத சட்டத்தை மீறிய செயலாகும். அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது சட்ட மீறல்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் சமூக விரோதிகள் இல்லாமல் அமைதியாக நடைபெற தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொகுதியில் போலீஸ் துறையை தேர்தல் கமிஷன் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும்.

திருமங்கலம் தொகுதியில் நாளைக்கே ஓட்டுப்பதிவு நடத்தினாலும் அதை சந்திக்க நாங்கள் தயார். நாங்கள் அனைவரும் பிரசாரத்துக்கு செல்லாமல் இப்படியே வெளியேற தயார். இதற்கு திமுகவினர் தயாரா?.

ஹாட்ரிக்' வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்கள். தொடங்கும் போது பேசுகிறவர்கள் தேர்தல் முடிவின் போது பேசுவார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார் பாண்டியன்.

பேட்டியின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுக வன்முறை-மார்க்சிஸ்ட் கண்டனம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருமங்கலம் தொகுதியில் அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் தேர்தல் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணிக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

இதனால் ஆத்திரமுற்ற திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அதிமுக தேர்தல் அலுவலகங்களை தாக்கியுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் மற்றும் தோழமைக் கட்சிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நியாயமாக தேர்தல் நடைபெற உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும், தேர்தல் பார்வையாளர்களிடம் அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயல்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X