வங்கதேசத்தில் மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சி
டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்திற்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று அங்கு பொதுத் தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. கிட்டத்தட்ட அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 300 எம்.பி. சீட்களில், அவாமி லீக் கட்சிக்கு மூன்றில் இரு பங்கு இடங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் ஹசீனாவின் பரம வைரியான கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சிக்கு, ஹசீனாவுக்கு கிடைத்த சீட்களில் பத்தில் ஒரு பங்கே கிடைத்துள்ளது.
கடைசியாக கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் கலீதா ஜியா கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையி்ல் தற்போது ஹசீனாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஆஸாதுஸ்மான் கூறுகையில், எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் அவாமி லீக் கட்சியால் ஆட்சி நடத்த முடியும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
இதுவரை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட 295 தொகுதிகளில், அவாமி லீக் கட்சிக்கு 229 சீட்கள் கிடைத்துள்ளன.
அவாமி லீக் சார்பில் போட்டியிட்ட இந்து வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கதேச தேசியவாத கட்சிக்கு 25 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. கலிதா ஜியா போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமிக்கு ஒரே ஒரு சீட்தான் கிடைத்தது.
தேர்தல் தோல்வி குறித்து கலீதா ஜியா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரிஸ்வி அகமது கூறுகையில், எங்களது ஆதரவாளர்கள் பல இடங்களில் ஓட்டுப் போட விடாமல் தடுக்கப்பட்டனர். இதனால்தான் எங்களுக்கு பல தொகுதிகள் கிடைக்காமல் போய் விட்டன. இதுகுறித்து நாங்கள் வழக்கு தொடருவோம் என்றார்.












Click it and Unblock the Notifications