ஸ்பெக்ட்ரம் ஏலம்-தடை செய்யக் கோரி வழக்கு
சென்னை: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலத்தை தடை செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாய்ஸ் என்ற நுகர்வோர் அமைப்பு இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் வசதி வழங்குவதற்காக 2004-ம் ஆண்டு மத்திய அரசு அகண்ட அலைவரிசை (ஸ்பெக்டரம்) கொள்கையை வகுத்தது. முதலில் இணையதள சேவை கேபிள் மூலம் கொடுக்கப்பட்டது.
புதிய கொள்கையின்படி வயர்லெஸ் முறையில் குறைந்த கட்டணத்திலும், மூன்றாவது தலைமுறை தொழில்நுட்பத்துடனும் அலைவரிசை சேவை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த அலைவரிசை சேவையை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்காக ஏலம் விடுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதுபோல ஏலம் விடுவது 2004-ம் ஆண்டு வகுக்கப்பட்ட கொள்கைக்கு விரோதமானது ஆகும். இது, மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
அலைவரிசை ஒதுக்கீட்டை வர்த்தகமாக கருதக்கூடாது. கொள்கைப்படி அலைவரிசையை தனியாருக்கு ஒதுக்கக்கூடாது.
அலைவரிசையை தனியாருக்கு ஒதுக்கினால் இப்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட பலமடங்கு கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகும். எனவே, அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான ஏல நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications