என்ஆர்ஐ மாநாட்டுக்கு இ-மெயில் மிரட்டல்
சென்னை: சென்னையில் வருகிற 7ம் தேதி தொடங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளதுது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் வருகிற 7ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாநாட்டு அரங்கை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தியுள்ள டிஜிபி ஜெயின், மாநாட்டுக்குத் தேவையான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாநாடு நடைபெறும் வர்த்தக மைய வளாகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளாகவும் தெரிவித்தார்.
இ மெயில் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்பது குறித்து தீவிர விசாரணை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.