காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஜெ கண்டனம்
சென்னை: காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
என்னதான் ஆத்திரமூட்டும் செயல் நடந்தாலும் இந்த மாதிரி அறிவீனமான ஆயுத தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கக் கூடாது. இது இஸ்ரேல் மீது மோசமான எண்ணத்தை சர்வதேச நாடுகளிடம் உருவாக்கியுள்ளது.
எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. இந்த மோசமான செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இது போன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை.
இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும். உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களையும் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
'பாப்பா' வழக்கு: ஆற்காடு விடுதலை!:
இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, ''ஒண்ணும் தெரியாத பாப்பா, போட்டுக்கிட்டாளாம் தாப்பாள்'' என வர்ணித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீது ஜெயலலிதா தொடர்ந்து அவதூறு வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலராக டி.வி.வெங்கட்ராமன், 1997ம் ஆண்டு இருந்தார். நிலக்கரி ஊழல் தொடர்பான கோப்புகள் அவரிடம் இருந்தன.
இந் நிலையில் திடீரென வெங்கட்ராமன் தாக்கப்பட்டார். இதில் அதிமுகவினருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, வெங்கட்ராமன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து ஆற்காடு வீராசாமி அப்போது வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒண்ணும் தெரியாத பாப்பா, போட்டுக்கிட்டாளாம் தாப்பாள் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஆற்காடு வீராசாமி மீது, ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அவதூறு வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கில் இருந்து ஆற்காடு வீராசாமியை விடுவிப்பதாக தீர்ப்பளித்தது.