சுப்ரீம்-ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் இனிமேல் ரூ. 1லட்சமாக இருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ. 90 ஆயிரமாக இருக்கும்.
உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு மாதச் சம்பளம் ரூ. 90 ஆயிரமாக இருக்கும். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ. 80 ஆயிரமாக இருக்கும்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்து விட்டதால், சட்ட மசோதாவை கொண்டு வர முடியாது என்பதால், அதற்குப் பதில் அவசரச் சட்டத்தைப் பிறக்க அரசு தீர்மானித்துள்ளது.
விரைவில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். அதேபோல நீதிபதிகளுக்கான ஓய்வூதியமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபல் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம், 6வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைக்கேற்ப திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.