கொச்சி: புத்தாண்டு... ஸ்வீடன் பெண் மானபங்கம்
கொச்சி: கொச்சியில் நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி மானபங்கப்படுத்தப்பட்டார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் சகோதரருடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கொச்சிக்கு சுற்றுலா வந்தார்.
நேற்று முன்தினம் இரவு போர்ட் கொச்சி பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்திக் கொண்ட உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் ஸ்வீடன் பெண்ணை மானபங்கம் செய்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணும், அவருடன் வந்தவர்களும் போலீஸில் புகார் கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், மானபங்கத்தில் ஈடுபட்ட சிபு (32), சிகாபுதீன் (26), சுஜீத் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது மானபங்கம் செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 சென்னை கல்லூரி மாணவர்கள் பலி:
இதற்கிடையே புத்தாண்டை கொண்டாடச் சென்ற 2 சென்னை கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலியாயினர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த உதயா (19) சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் பாலகுமார் (19) வைஷ்ணவா கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் 5 நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட 3 மோட்டார் சைக்கிள்களில் ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் அருவிக்கு சென்றனர்.
இரவு 8 மணி அளவில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உதயா, பாலகுமார் ஆகியோர் தங்கள் முன்னால் சென்ற டாங்கர் லாரியை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பின்னால் வந்த டாங்கர் லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.