பிரபாகரனின் தந்திரப் பேச்சுக்கு இந்தியா மயங்காது: பொகல்லகாமா
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த இலங்கை முயல்வதாக பிரபாகரன் கூறுவதை இந்தியா நம்பாது, அதில் மயங்காது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறியுள்ளார்.
கிளிநொச்சி வீழ்ந்துள்ளதாக ராணுவம் கூறியுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார் பொகல்லகாமா.
அவர் கூறுகையில், பிரபாகரன் உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும். அதிபர் ராஜபக்சேவின் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும். வன்முறை, தீவிரவாதத்தை விட வேண்டும்.
தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்ற நடவடிக்கைளில் தன்னையும் அவர் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழர் பகுதிகளிலும், இலங்கையிலும் நீடித்த அமைதிக்கு அவர் வழி ஏற்படுத்த வேண்டும்.
மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே, பிளவை ஏற்படுத்த இலங்கை முயல்வதாக கூறியிருந்தார். பேச்சுவார்த்தைக்கும், அமைதிககும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் அதை கண்டு இந்தியா ஏமாந்து விடாது. பிரபாகரனின் பேச்சைக் கேட்க இந்தியாவில் யாரும் தயாராக இல்லை என்றார் பொகல்லகாமா.












Click it and Unblock the Notifications