For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை-தம்பதி கழுத்தை அறுத்து கொடூர கொலை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் குழந்தைகள் இல்லாத தம்பதி கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 3 நாட்களுக்குப் பின்னர் அவர்களது பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டில், நகை, பணம் கொள்ளை போயுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் தெப்பகுளம் எதிரே ஜோன்ஸ் ரோட்டில் டெம்பிள் வியூ' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்த குடியிருப்பில் 26 வீடுகள் உள்ளன. 2வது மாடியில் அனந்தகிருஷ்ணன் (55) என்பவர் வசித்து வந்தார். இவர், தண்டையார்பேட்டையில் உள்ள ரயில்வே டீசல் அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றியவர். இடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு மன நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.

இவரது மனைவி பெயர் யமுனாபாய் (50). இவர், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பிரிண்டிங் மற்றும் ஸ்டேஷனரி பிரிவில் தலைமை குமாஸ்தாவாக பணியாற்றினார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 12 ஆண்டுகளாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தனர். தினமும் யமுனாபாய் காலையில் வேலைக்கு சென்றுவிடுவார். கணவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், வேலைக்குப் போவதற்கு முன்பு கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு மனைவி வேலைக்குப் போவாராம்.

இவர்களது வீட்டில் அஞ்சலை, கோவிந்தம்மாள் என்ற 2 பெண்கள் வீட்டு வேலை செய்தனர். அஞ்சலை வீட்டை சுத்தம் செய்வார். கோவிந்தம்மாள் பாத்திரங்களை கழுவுவார்.

செவ்வாய்க்கிழமை கோவிந்தம்மாள் காலிங் பெல்லை அழுத்தினார். வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. உடனே திரும்பி போய்விட்டார். அதுபோல் புதன்கிழமையிலும் கோவிந்தம்மாள் வந்தார். காலிங் பெல்லை அழுத்தினார். வீடு திறக்கவில்லை. நேற்று காலையிலும் 8 மணியளவில் கோவிந்தம்மாள் வந்து காலிங் பெல்லை அழுத்தினார். கதவு திறக்கப்படவில்லை.

3 நாட்களாக காலை பத்திரிகையும் எடுக்கப்படாமல் வீட்டு வாசலிலேயே கிடந்தன. இதனால் கோவிந்தம்மாள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரித்தார். அவர்களும் கடந்த திங்கட்கிழமை இரவில் இருந்து வீடு பூட்டியபடியே இருக்கிறது. அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என்று கூறினர்.

இதற்கிடையில், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. அது பிணம் வாடை போல் இருக்கவே, கோவிந்தம்மாள் சந்தேகப்பட்டு எதிர் வீட்டில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார்.

அனந்தகிருஷ்ணனின் வீட்டு சாவி ஒன்று எதிர் வீட்டில் வசிப்பவரிடம் யமுனாபாயால் தரப்பட்டிருந்தது. அந்த அந்த சாவி மூலம் கதவை திறக்க எதிர்வீட்டினர் முற்பட்டபோது கதவு தானாக திறந்துகொண்டது. வீட்டின் உள்ளே கண்ட காட்சி பதற வைத்தது.

வீட்டுக் கதவையொட்டி மல்லாந்த நிலையில் அனந்தகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சமையல் அறைக்குள் யமுனாபாயும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அனந்தகிருஷ்ணன் பிணமாக கிடந்த அறையிலும், யமுனாபாய் பிணமாக கிடந்த அறையிலும் ரத்தம் ஆறு போல ஓடி உறைந்து காணப்பட்டது.

இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இரு பிணமும் அழுகிய நிலையில் இருந்தன.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்து அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போர், வேலைக்கார பெண்கள் அஞ்சலை, கோவிந்தம்மாள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து சம்பவம் நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சைதாப்பேட்டை ரயில் தண்டவாளம் வரை ஓடி சென்று நின்றது.

கொலையாளிகளின் கைரேகை சிக்கியுள்ளது. கொலையாளிகள், அனந்தகிருஷ்ணனுக்கும், யமுனாபாயுக்கும் நன்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலையாளிகள் 2 பேர் வந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வீட்டில் இருந்த 3 பீரோக்களும் திறந்து அலங்கோலமாக கிடந்தன. அதற்குள் இருந்த நகை பெட்டிகளும் காலியாக இருந்தன. எனவே லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இவர்களுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை. வீட்டில் இருந்த நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

அனந்தகிருஷ்ணனின் பூர்வீகம் கேரளா. ஆனால் திருச்சியை அடுத்த அரியலூரில் தான் அவர் பிறந்து வளர்ந்தார். அனந்தகிருஷ்ணனின் ஒன்றுவிட்ட அண்ணன் விஜயகுமார் என்பவர் சென்னையில் வசிக்கிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் அனந்தகிருஷ்ணன் தம்பதிக்கு எதிரிகள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X