விரைவில் விடுதலைப் புலிகள் பொங்கி எழுவார்கள்: வைகோ
மதுரை: விடுதலைப் புலிகளுக்கு தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிகமான பின்னடைவுதான். விரைவில் கடலில் அலைகள் பொங்கி ஆர்ப்பரிப்பதைப் போல புலிகளும் பொங்கி எழுவார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் 250வது பிறந்த நாளையொட்டி பெரியார் பஸ் நிலையம் எதிரே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு நேற்று வைகோ மாலை அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது இலங்கை ராணுவத்திற்கு தற்காலிகமான வெற்றிதான். அவர்களுக்கு நிரந்தர வெற்றி கிடைக்கவே கிடைக்காது.
தமிழீழ விடுதலைப் புலிகள், கடலில் அலைகள் ஆர்ப்பரித்துப் பொங்கி எழுவதைப் போல விரைவில் பொங்கி எழுவார்கள்.
இந்த நேரத்திலாவது உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து அவர்களை ஆதரிக்க வேண்டும்.
இந்த நெருக்கடியான நேரத்திலாவது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை உலகத் தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்திய அரசு இப்போதாவது ஈழத் தமிழர்களுக்கு செய்து வரும் துரோகத்தை உணர் வேண்டும்.
ராஜபக்சே மிகக் கொடூரமாக நடந்து கொள்கிறார். அவரது நடவடிக்கை நீடிக்காது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications