மதுரை வந்தது துணை ராணுவம் - நாளை முதல் திருமங்கலத்தில் பணி
மதுரை: தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டின்படி துணை ராணுவப் படையின் நான்கு கம்பெனி வீரர்கள் மதுரை வந்துள்ளனர். மற்ற கம்பெனிகளும் இன்று இரவுக்குள் மதுரை வந்து விடும். நாளை முதல் இவர்கள் திருமங்கலத்தில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் டிசம்பர் 27ம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு திமுக, அதிமுகவினர் இடையே கடும் மோதல் நடந்தது.
ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமை மோசமடைந்ததால் துணை ராணுவப் படையினரை வரவழைக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் துணை ராணுவப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தது.
எட்டு கம்பெனி பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நான்கு கம்பெனி துணை ராணுவப்படையினர் மதுரை வந்தனர்.
ஒவ்வொரு கம்பெனியிலும் 86 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் திருமங்கலம் சென்றடைந்தனர். இன்னொரு பிரிவு மதுரையில் உள்ளது.
மீதமுள்ள கம்பெனிகளும் இன்று இரவுக்குள் வந்து விடும் எனத் தெரிகிறது.
அதன் பின்னர் நாளை முதல் திருமங்கலம் தொகுதியில் இந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.