வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் ஸ்டாலின் - கூறுகிறது அதிமுக

திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரம் முதல் நாளிலிருந்தே அனல் பறந்து வருகிறது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக அவர்களில் சிலரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இரு தரப்பும் சரமாரியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களிடம் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொகுதிப் பாதுகாப்புக்காக தற்போது துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் அதிமுக தரப்பில் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போல உள்ளது.
வாக்காளர்களுக்கு ஸ்டாலினும், அவருடன் வருபவர்களும் பணம் கொடுக்கின்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும் என அதிமுக கூறுகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுகையில், ஸ்டாலினும் மற்ற திமுக அமைச்சர்களும் பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகியிருப்பது எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை.
திமுக எப்படியெல்லாம் கீழ்த்தரமாக செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றனர் என்றார்.
ஆனால் அதிமுகவின் புகாரை திமுக நிராகரித்துள்ளது. ஸ்டாலின் இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்திய காட்சிகள் அல்ல. அது தேர்தல் பிரசாரமும் அல்ல. திமுக கட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படத்தை வெட்டி, ஒட்டி, எடிட் செய்து போலி வீடியோவை உருவாக்கியுள்ளனர் அதிமுகவினர்.
திருமங்கலத்திலும் ஸ்டாலின் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அது கட்சி விழா என்று திமுக தரப்பு விளக்கியுள்ளது.
இந்த நிலையில் ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று கருணாநிதி பொதுக் கூட்டம்:
இந் நிலையில் திருமங்கலம் தொகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி இன்று பேசுகிறார்.
தேவர் சிலை அருகே நடைபெறும் இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலுவும் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications