போலீஸுக்கு பொங்கல் இலவசம் இல்லை?
சிதம்பரம்: முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள பொங்கள் பரிசுப் பொருட்கள் போலீஸாருக்குக் கிடையாது என ரேஷன் கடைகளில் கூறப்படுவதால் போலீஸார் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
பொங்கல் வைப்பதற்கான அனைத்துப் பொருட்களும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த இலவசப் பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடலூர் மாவட்ட ரேஷன் கடைகளில், போலீஸாரின் ரேஷன் கார்டுகளுக்கு இந்த இலவசப் பொருட்கள் கிடையாது என கூறுகிறார்களாம். இதனால் போலீஸாரும், அவர்களது குடும்பத்தினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
போலீஸாருக்கு காவல்நிலையங்களிலேயே ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அனைவருக்கும் காக்கி நிற ரேஷன் கார்டு வழங்கப்படும் என்றும், அந்தந்த பகுதியில் ரேஷன் கடைகளில் பொருள்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அரசு அண்மையில் அறிவித்தது.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 50 சதவீதம் போலீஸாருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.
ரேஷன் கார்டுகள் கேட்டு செல்லும் போலீஸார் குடிமைப் பொருள் அலுவலக ஊழியர்களால் அலைகழிக்கப்படுகிறார்கள்.
இதனால் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் போலீஸார் அவதியுற்று வருகின்றனர்.
அப்படியே வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகிய குறிப்பிட்ட 3 பொருள்கள் மட்டும்தான் வழங்கப்படுகிறது.
பாமாயில், ரவா, மைதா போன்ற பொருள்கள் வழங்கப்படுவதில்லை என போலீஸார் புகார் தெரிவித்தனர்.
ஆனால், காக்கி நிற ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்தது உண்மைதான். ஆனால் எங்களுக்கு கூடுதலாக கோட்டா ஒதுக்கப்படவில்லை.
ஒதுக்கப்பட்ட கோட்டா படி கார்டுகளுக்கு குறிப்பிட்ட பொருள்களை வழங்கி வருவதாக குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலகம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications