டெக் மஹிந்திராவுடன் இணைப்பா?-சத்யம் கடுகடு!
மும்பை: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை டெக் மஹிந்திராவுடன் இணைப்பதாக வந்த மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கும் முறையான விளக்கம் தந்துள்ளது சத்யம் நிறுவனம்.
இந்த வதந்திகளால் இன்று சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு 3.56 சதவிகிதமும், டெக் மகிந்திராவின் பங்குகள் 12 சதவிகிதம் வரையிலும் உயர்ந்தன.
இதுகுறித்து சத்யம் நிறுவனம் கூறியிருப்பதாவது:
ஒரு வர்த்தக நாளிதழின் இன்றைய பதிப்பில், டெக் மஹிந்திரா நிறுவனம் முழுமையாக சத்யம் நிறுவனத்துடன் இணையப் போகிறதென்று செய்தி வெளியாகியிருந்தது. மேலும் ஹெச்பி, ஐபிம், மைண்ட்ரீ நிறுவனங்களும் சத்யம் நிறுவனத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை, என்று சத்யம் விளக்கம் கூறியுள்ளது.
செபியிலும் இந்த விளக்கத்தை இன்று அளித்துள்ளது சத்யம்.
பங்குகளை வாங்க விரும்பும் ஊழியர்கள்:
இந்நிலையில் சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்க அதன் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிப் போவதைத் தடுக்கும் விதத்தில், சத்யம் நிறுவனப் பங்குகளை வெளிசந்தையில் வாங்கிக் கொள்ளலாம் என பெரும்பாலான ஊழியர்கள் கூடி முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் மூன்றாவது காலாண்டுக்கான முடிவுகள் வெளியான பிறகு பங்குகள் வாங்குவதில் இறுதி முடிவு மேற்கொள்ள உத்தேசித்துள்ளனர்.
ஒருவேளை பெரும்பாலான பங்குகள் ஊழியர் கைகளுக்கு வந்துவிட்டாலும் கூட தலைவராக ராமலிங்க ராஜுவே நீடிக்கட்டும் என்று அவர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.