காதலன் சுட்டுக் கொலை-காதலி படுகாயம்: சைக்கோ வெறிச்செயல்
சித்தூர்: ஆந்திராவில் சுற்றுலா சென்ற காதலர்களை சைக்கோ நபர் ஒருவர் சரமாரியாக சுட்டார். இதில் காதலன் பலியானார். காதலியும், அவரது காதலனைக் காப்பாற்ற முயன்ற வாலிபரும் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி என்ற ஊரை சேர்ந்தவர் சிவா. பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர், ராதா. இருவரும் காதலர்கள்.
நேற்று முன்தினம், இவர்கள் இருவரும், சித்தூர் அருகே உள்ள கைகல் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். நீர்வீழ்ச்சி அருகே உள்ள மலைப்பகுதியில் தனிமையில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம வாலிபர், துப்பாக்கி முனையில் காதல் ஜோடியை மிரட்டினார். தன்னை போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டார். அவர், ராதா அணிந்து இருந்த தங்க நகைகளையும், செல்போனையும், பணத்தையும் பறிக்க முயன்றார். ராதாவை அந்த மர்ம வாலிபர், பாலியல் பலாத்காரமும் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபரைத் தடுக்க முயன்றார் சிவா. அப்போது அந்த மர்ம நபர் சிவாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் சிவா சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் என்ற வாலிபர் அங்கு ஓடி வந்தார். ராதாவைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அந்த மர்ம நபர் ராதா மற்றும் விஜய்யை சரமாரியாக சுட்டார்.
இருவரும் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து மர்ம வாலிபர் அங்கிருந்து, காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் பற்றி கேள்வி பட்டதும், பலமனேரி போலீசார் விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர்.
காயமடைந்த ராதா, விஜய் ஆகியோரை, சிகிச்சைக்காக, சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிவாவின் உடலை, இறுதி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம வாலிபர் சைக்கோ மனிதராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.