பெங்களூர் தமிழ் பெண் கொலை-கணவனின் கள்ளக் காதலி சரண்
கிருஷ்ணகிரி: துண்டு துண்டாய் வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் கிடந்த பெங்களூர் தமிழ்ப் பெண்ணின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது கணவரின் கள்ளக் காதலி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் ஒரு பெண்ணி்ன் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன.
ஓரிடத்தி்ல் உடல் பகுதி, இன்னொரு இடத்தி்ல் கை, கால்கள், இன்னொரு இடத்தி்ல் விரல்கள் என பயங்கர கோலத்தி்ல் அந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பெங்களூர் லிங்கராஜபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை லட்சுமி (28) என்று தெரியவந்தது.
தனது மனைவியை 30ம் தேதி முதல் காணவில்லை என லட்சுமியின் கணவர் சம்பங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந் நிலையில் இந்தக் கொலை குறித்து பெங்களூர் போலீசாரின் உதவியோடு தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது சம்பங்கிக்கு செலின் (28) என்ற கள்ளக் காதலி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பங்கி மற்றும் செலின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சம்பங்கி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பியூனாக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய செலின், இலங்கையைச் சேர்ந்தவராவார். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது. இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், தன்னை திருமணம் செய்யுமாறு செலின் கூறியதை சம்பங்கி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு மனைவி, இரு குழந்தைகள் இருப்பதாகக் கூறி திருமணத்துக்கு மறுத்தார்.
இந் நிலையில் தான் லட்சுமி கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் கிடந்தார்.
செலின் மீது சந்தேகமடைந்த தமிழக போலீசார் எனவே, செலினைப் பிடிக்க தனிப்படையை பெங்களூருக்கு அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் செலின் நேற்று திருவள்ளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பரணீதரன் முன்னிலையில் சரணடைந்தார். தன்னை சந்தேகப்பட்டு போலீசார் தேடுவதால், கோர்ட்டில் சரண் அடைவதாக அவர் தெரிவித்தார்.
செலினை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சம்பங்கியின் உதவியோடு இந்தக் கொலை நடந்ததா இல்லை செலினே திட்டமிட்டு இதைச் செய்தாரா என்று தெரியவில்லை. செலினை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் முழு விவரம் வெளிவரும்.