அதிமுக கூட்டணிக்கு அலைகிறது: விஜய்காந்த்
திருமங்கலம்: திமுக பணம் தருகிறது, அதிமுக கூட்டணிக்காக அலைகிறது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து பல இடங்களில் அவர் பேசியதாவது:
ஓட்டுக்காக திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஏராளமாக பண பட்டுவாடா செய்துள்ளன. தங்கம், மிக்ஸி கூட கொடுப்பார்கள். ஆனால் 9ம் தேதிக்குப் பின் இந்த வெளியூர்க்காரர்கள் எல்லாம் போய் விடுவார்கள். ஊரே வெறிச்சோடித்தான் கிடக்கும்.
திமுக பணம் தருகிறது, அதிமுக கூட்டணிக்காக அலைகிறது. இந்த இரு கட்சிகளும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ என்ன வழி வகை செய்தன?. சம்பாதித்த சொத்தை காப்பாற்றவே இவர்கள் அரசியலில் உள்ளார்கள்.
நீங்கள் அவர்களை வெற்றி பெறச் செய்த பின், எங்கள் பகுதியில் கொசுத் தொல்லை இருக்கு, கொசு மருந்து அடிங்க என்று சொன்னால் கூட ஓசியிலா ஓட்டு போட்டீங்க.. காசு வாங்கிட்டு தானே போட்டீங்க என்று விரட்டுவார்கள். சிந்தியுங்கள்.
மிட்டாயில் ஆரம்பித்து இப்போது ஓட்டுக்கு ரூ.5,000 வரை தர ஆரம்பித்துவிட்டார்கள். இந்த விஜயகாந்தால் அப்படி கொடுக்க முடியாது. நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அந்தக் கட்சிகள் தைரியமாக சொல்லட்டும் பார்ப்போம்.
திண்டுக்கல் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு திருப்புமுனை ஏற்பட்டது போல் எனக்கும் இந்த திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் மூலம் திருப்பு முனையை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் விஜய்காந்த்.
இதற்கிடையே அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
தேர்தலின்போது இலவச பொருட்கள் வழங்கும் வழிமுறையை கருணாநிதி, சோனியாவிற்கு பரிந்துரைத்தார். ஆனால் அது பலனிக்கவில்லை. குஜராத் மற்றும் கர்நாடகாவில் அவர்கள் தோல்வியையே தழுவினர்.
ஆந்திராவில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதாக கூறினார்கள். அதை ஆராய நான் அங்கு சென்றேன். நான் ஒரு அரிசி வியாபாரி என்பதால் இதுபற்றி தெரியும். இது மக்களை ஏமாற்றும் திட்டமாகும். ஏனென்றால் அந்த அரிசி மிகவும் நாற்றமடித்தது. அது விற்பனையாகாத 2 ரூபாய் அரிசி என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தங்கள் நிலை என்ன? என்ற கேள்விக்கு,
இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தினரால் போடப்படும் குண்டுகள் இந்தியாவில் தயாரித்தது. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு ராணுவத் தீர்வு அல்லாமல் அரசியல் தீர்வே அமைய வேண்டும்.
நாகலாந்தில் இந்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் இலங்கை பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழி வேண்டுமே அல்லாமல் அந்த நாட்டு ராணுவத்திற்கு உதவ கூடாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications