என்றும் கருணாநிதியுடன் இருப்போம்: தங்கபாலு
திருமங்கலம்: திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கும், கருணாநிதியுடன்தான் என் இருப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் தங்கபாலு பேசுகையில், இந்த தேர்தல் வெற்றியால் மத்திய, மாநில ஆட்சிகளில் மாற்றம் ஏற்பட போவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.
தற்போது நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. அதுபோலவே 5ம் முறையாக கருணாநிதி முதல்வராக வேண்டும் என்று சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்தோம். அதிலும் வெற்றி பெற்றோம்.
சோனியா தலைமையில் மத்தியில் நடக்கும் கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி அச்சாணி போன்றவர். மாநில கூட்டணியில் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டதால்தான் அவருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி தமிழ் செம்மொழியாக்கப்பட்டது.
மக்களின் 150 ஆண்டு கால கனவான சேதுசமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு அதில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் தற்போது சிறிது தாமதமாகும் இந்த திட்டம் விரைவில் நிச்சயம் நிறைவேறும்.
எங்கள் கூட்டணியை கைப்பிடித்து அழைத்துச் செல்பவர்
கருணாநிதி. நாங்கள் என்றும் அவருடன் இருப்போம். இடைக்காலத்தில் கூட்டணியில் இருந்து பலர் பிரிந்து போயிருக்கலாம். ஆனால் உண்மைத் தோழர்களான நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுத்துள்ளோம் என்றார் தங்கபாலு.
ஜெ.வுக்கு அடிப்படை அறிவில்லை-ஸ்டாலின்:
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இடைத்தேர்தலில் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் நான் பிரசாரம் செய்து வருகிறேன். தொடர்ந்தும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் தனது பிரசாரத்தின்போது ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். தொகுதியில் உள்ள 190 வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு வரும்
வாக்குப்பதிவு இயந்திரங்களை பழுதாக்கி அதற்காக மாற்று
இயந்திரங்களை கொண்டு வருவோம் என்றும், அந்த இயந்திரங்களில் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தேர்தலை நடத்துவது தேர்தல் அதிகாரிகள்தான். எனவே அவரது கருத்துக்கு தேர்தல் அதிகாரிகளே விளக்கம் அளித்து உள்ளார்கள்.
தேர்தலை யார் நடத்துகிறார்கள்? என்ற உண்மையைக்கூட அறியாமல் அவர் இது போல பேசியுள்ளார். ஏற்கனவே 2 முறை முதல்வராக இருந்த அவருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லை என்று தெரிகிறது.
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான் தனக்கு கிடைத்த, ஆயிரம் ஆண்டுகள் வாழும் சக்தி தரும் நெல்லிக்கனியை அவ்வை பாட்டியிடம் ஒப்படைத்தார். அதுபோல திருமங்கலம் தொகுதி வாக்காளர்களான உங்கள் வாக்குப்பதிவின் மூலம் கிடைக்கும் வெற்றிக்கனியை நமது வேட்பாளர் லதா அதியமான் நமது தலைவரிடம் ஒப்படைப்பார் என்றார் ஸ்டாலின்.
திமுகவுக்கு காங்கிரஸ் பிரச்சாரம்:
இதற்கிடையே திமுக வேட்பாளருக்கு ஆதராவக காங்கிரஸார் பிரச்சாரம் மெத்தனமாக இருந்த நிலை சில நாட்களாக லேசாக மாறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ஜி.கே.வாசன், தங்கபாலு போன்றவர்கள் வந்து போனதையடுதது கோவை காங்கிரஸ் மேயர் வெங்கடாசலம் அங்கேயே முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.