கலப்பு திருமணம்: தாயின் ஜாதியும் பொருந்தும்
கலப்பு திருமணத்தால் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியும் பொருந்தும்: உயர்நீதிமன்றம்
சென்னை: கலப்பு திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் ஜாதி தவிர, தாயின் ஜாதியும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை பஞ்சாயத்து யூனியன் 12-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கஸ்தூரி.
இந்த வார்டு ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்டதாகும். இதில் கஸ்தூரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. வேட்பாளர் சிவப்பிரகாசம் கோவை செசன்சு கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், கஸ்தூரியின் தந்தை நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர். தாயார் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். தந்தை எந்த ஜாதியோ அதுதான் குழந்தைக்கும் பொருந்தும். ஆனால் கஸ்தூரி தனது தாயாரின் ஜாதியை காட்டி ஆதி திராவிடர் என சான்றிதழ் பெற்றுள்ளார். எனவே அவர் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஸ்தூரி வெற்றி செல்லாது என்று தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் இதை விசாரித்தார்.
அப்போது, கஸ்தூரியின் வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜராகி, கலப்பு திருமணம் செய்யும் தம்பதியின் குழந்தைக்கு தாயின் ஜாதியும் பொருந்தும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் கீழ் கோர்ட் தவறாக தீர்ப்பு கூறி உள்ளது. எனவே கஸ்தூரி வெற்றி செல்லும் என அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, தாயின் ஜாதியும் குழந்தைக்கு பொருந்தும். எனவே கஸ்தூரிக்கு ஆதி திராவிடர் என சான்றிதழ் கொடுத்தது சரியானது. இதனால் அவரது வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications